Skip to main content

ஏற்காட்டில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டி அழிப்பு; வனத்துறை அலுவலர் பணியிடைநீக்கம்!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

Illegal cutting of trees in Yercaud; Forest department officer dismissal!

 

ஏற்காடு வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி அழிக்க உடந்தையாக இருந்த வனத்துறை அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம், சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு வனப்பகுதியில் அகரம் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து குப்பனூர் முதல் ஏற்காடு முதன்மைச் சாலை வரை செல்வதற்கு வசதியாக 2.50 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதிக்குள் புதிய சாலை அமைக்க அகரம் மலைக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். 


இந்த சாலை அமைக்க அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், மலைக்கிராம மக்கள் அறியாமையில், சாலை அமைய உள்ள பகுதிகளில் இருந்த மரங்களை வெற்றி அகற்றியுள்ளனர். இதற்கு வனத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில், வனத்துறை அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம், உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். 


முதல்கட்ட விசாரணையில், மலைக்கிராம மக்கள் சட்ட விரோதமாக வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்றதும், அதற்காக அனுமதியின்றி 200 மரங்களை வெட்டி வீழ்த்தி இருப்பதும் தெரியவந்தது. வனக்காப்பாளர் குமார் என்பவர், மலைக்கிராம மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மரங்களை வெட்ட அனுமதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், வனச்சரகர் பரசுராமமூர்த்தி, வனவர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மரங்கள் வெட்டப்படுவது தெரிந்து இருந்தும் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 


இந்த சம்பவம் வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.