'Ilayaraja cannot claim'-Echo company's argument

இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளது.

Advertisment

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் பாடல்களின் முதல் காப்புரிமை உரிமையாளர்கள். மேலும் பதிப்புரிமை தொடர்பாக பட தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து 4500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜா உடன் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் 1990 ஆம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கி வந்ததாகவும் அதன்பின் நிறுத்திவிட்டதாகவும் வாதங்களை வைத்தார்.

Advertisment

இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ இசையமைப்பாளருக்கு தார்மீக உரிமை வரும். சமீபத்தில் தன்னுடைய பாடல் திரிக்கப்பட்டதாக 'மஞ்சள் மல்' பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என எக்கோ நிறுவன வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அப்பொழுது இளையராஜாவை கௌரவப்படுத்தியதாக 'மஞ்சள் மல்' இயக்குநரும் தயாரிப்பாளரும் கூறியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளருக்கு தன்னுடைய உரிமை வழங்கி விட்டார். உரிமை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ தரப்பு வாதங்களை வைத்தது. எக்கோ நிறுவன தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இளையராஜாவின் தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment