Skip to main content

'மனசு'தான் ஒரு மனிதனுக்கு ராகம் - மாணவர்கள் மத்தியில் இளையராஜா

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
Ilaiyaraaja



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு 75-வது பிறந்தநாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.  பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா  கலந்து கொண்டு அரங்கின் மத்தியில் சென்று மாணவ மாணவிகளுடன் இணைந்து பிறந்த நாள் கேக்கை வெட்டி பரவசப்படுத்தினர். அப்போது மாணவ மாணவிகள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கைதட்டி வரவேற்றனர். 
 

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த அரங்கிற்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். முதல்முறையாக 1994-ல் எனக்கு இந்த அரங்கில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இந்த விழாவிற்கு வந்துள்ளேன். இசை, பாடல், காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கிறது. நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதயகுரலிலிருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையைட்டுகிறோம். இதனால் மனிதனின் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். இசையால் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாகவும் உணர்ச்சிகளை தூண்டும் விதமாகவும் உள்ளது என்றார். 

 

Ilaiyaraaja


அப்போது மாணவர்கள் அவரது பேச்சை கைதட்டி விசிலடித்து வரவேற்றனர். அப்போது அவர் பேச்சை நிறுத்திவிட்டு, விசிலடிக்கும் இடமில்லை. இது பல்கலைக்கழகம். கோயிலுக்கும் மேலே உள்ள இடத்தில் நான் நானாக உள்ளேன். நீங்க நீங்களாக இருங்கள் என்று மாணவர்களை அறிவுரை வழங்கி பேச்சை தொடங்கினார்.
 

இதனை தொடர்ந்து  அவர் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அதேபோல் மாணவர்களும் ஒவ்வொரும் ஒவ்வொருவிதமாணவர்கள் நீரோடைகள் சென்று பசுமையை உருவாக்குவது போல் மாணவர்கள் செல்லும் இடங்களெல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என வாழ்த்தினார். 
 

Ilaiyaraaja


 

எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று அவர் முன் இருந்த ஹார்மொனியம் பெட்டிமீது சத்தியம் செய்து மாணவர்களிடம் கூறினார். மேலும் இசை தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளது. சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது.  நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளது. மனசு தான் ஒரு மனிதனுக்கு ராகம்,  இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்றார். 
 

முன்னதாக இளையராஜாவிற்கு மாலை அணிவித்து தலையில் கிரீடம்  அணிவித்தனர் அப்போது அவர் தலைக்கு கிரீடம் வேண்டாம் என்று மறுத்தார்.  பின்னர் மாணவர்களிடம் தலைக்கணம் இருக்கக்கூடாது என்று செய்கை மூலம் காட்டினார் இதனை மாணவர்கள் கை தட்டி வரவேற்றனர்.
 

 அதேபோல் துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், இளையராஜாவிற்கு 75-ம்  ஆண்டு பிறந்தநாள் விழா நாளில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 90-வது ஆண்டின் தொடக்கநாள் இன்று எனவே பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தை இருக்கை அமைக்க அனுமதிக்க வேண்டும். இந்த இருக்கையின் மூலம் இசைதுறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறபிக்கப்படும் என்று கோரிக்கை விடுத்தார்.  இதனை இளையராஜா ஏற்றுக்கொண்டு  90-வது ஆண்டு முடிவதற்குள் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். இதனை மாணவர்கள் பெருத்த கரகோஷம் எழுப்பி வரவேற்று  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைதொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் இளையராஜாவின் சாதனைகள் குறித்து பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.