திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வடக்குவாசல், திருவாரூர் மாவட்டம், அகரதிருநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில், வேதாரண்யம் ஆகிய இடங்களில் முன் விரோதம் காரணமாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரையும், கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளையும் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டம் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். மேலும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 10 குழந்தைகள் மற்றும் அருகாமையில் வசிக்கும் 20 குழந்தைகளிடம் மாணவ மாணவியர்களின் எதிர்காலக் கனவுகள் மற்றும் பள்ளிப்படிப்பு பற்றி என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிந்தனர்.
தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் குழந்தைகள் அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு கொள்வது குறித்தும், மேல் படிப்பு குறித்து உள்ள வாய்ப்புகள் பற்றி அளிக்கப்படும் வழிகாட்டல்கள் குறித்தும், ஆங்கிலத்தில் சரளமாக எழுதப் பேசுவதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், நவீன கணிணி தொழில் நுட்பங்களைக் கற்று அறிவதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில், மேற்சொன்ன வாய்ப்புகளை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும், ஊக்குவிப்பும் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை, கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினைச் சார்ந்த குழந்தைகளையும், கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளையும் தொடர்ந்து சந்தித்து மேற்சொன்ன வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் இடையூறு இன்றி கல்வியைத் தொடர தேவையான சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு, குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அளிக்கப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஒரு புதிய நூலகத்தைக் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பணிக்குச் செல்லும் பெண் காவலர்களின் குழந்தைகள் நலனைப் பேணும் வகையில் குழந்தைகள் மகிழ்வுறு மையத்தையும் (Creche) திறந்து வைத்தார். மேலும் வேதாரண்யம் உட்கோட்டத்தில் கடலோரத்தில் அகஸ்த்தியம்பள்ளி, கோடியக்காட்டி உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றியும் மற்றும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.