Skip to main content

'100 நாட்கள் உழைத்தால் 200 தொகுதியை தமிழ் அன்னையின் காலடியில் படைக்கலாம்'- ப.சிதம்பரம் பேச்சு!

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

 If you work for 100 days, you can create 200 volumes at the feet of Tamil mother - P. Chidambaram talk!

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கத்தில் திருவரங்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல், தலைமையில் தொகுதிப் பொறுப்பாளர்கள் புஜ்பராஜ், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட, வட்டார, பேரூர் என அனைத்து நிர்வாகிகளும், முன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமி நாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

 

 If you work for 100 days, you can create 200 volumes at the feet of Tamil mother - P. Chidambaram talk!

 

கூட்டத்தில் ப.சிதம்பரம் எம்.பி பேசியதாவது,  ''ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஆயிரம் வாக்குகள் இருக்கும். அதில் ஒவ்வொரு சமுதாயத்தில் இருந்தும் வாக்குகளை பெற தொடர்ந்து உழைக்க வேண்டும். கடுமையான போட்டி நிலவும். கடைசியில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே தி.மு.க கூட்டணியின் வெற்றியும் உறுதியாகிவிட்டது. தமிழக மக்கள் ஒருபோதும் பா.ஜ.க வை ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க ஒரு நச்சுச்செடி. தமிழகத்தில் பா.ஜ.க உரம் போட்டாலும் வளராது. அரசியல், பணம், ஆதிக்கம் செய்து வரலாம் என்று நினைப்பார்கள் அது முடியாது. அதற்கு உதாரணம்தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள். பெரியார் பகுத்தறிவை வளர்த்தார். காங்கிரஸ் கட்சி தமிழ் அறிஞர்களை வளர்த்தது. கீழடி நம் நாகரீக கலாச்சாரத்தை வெளிக்காட்டுகிறது. இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை இந்தி திணிப்பை தான் வெறுக்கிறோம். கனிமொழி எம்.பியிடம் இந்தியில் பேசுகிறார்கள், மதுரை எம்.பி வெங்கடேசனுக்கும், முதலமைச்சர் எடப்பாடிக்கும் இந்தியில் கடிதம் எழுதுகிறார்கள். இது இந்தி ஆதிக்க உணர்வைக் காட்டுகிறது. இந்தி, இந்து, இந்துத்துவா என்பதை ஏற்க முடியாது. முதல் செம்மொழி 'தமிழ்' என்பதை காங்கிரஸ் அரசு கொண்டு வந்து அதற்கான மையத்தையும் உருவாக்கியது. அதை மைசூரில் ஒரு பிரிவாக வைக்கிறது பா.ஜ.க.

 

பா.ஜ.க ஜனநாயக கட்சி இல்லை. வாஜ்பாய் காலத்தில் தான் ஜனநாயக கட்சியாக இருந்தது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்று சொல்லிவிட்டு ஒரே கட்சி பா.ஜ.க என்று சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. சில மாநிலங்களை நம்மிடம் இருந்து திருடிக் கொண்டார்கள். ஆனால் அதையும் மீட்போம். 100 நாட்கள் நாம் கடுமையாக உழைத்தால் போதும் 200 தொகுதிகளை வென்று தமிழ் புத்தாண்டில் தமிழன்னைக்கு படைப்போம். இந்த ஆட்சியில் 98 வயதிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் திருத்தச்சட்ட மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை அவர்கள் கேட்காமல், நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்கள்'' என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.