publive-image

Advertisment

கோவை புறநகரில் பல்வேறு பகுதிகளில் தொலைந்து போன செல்போன் குறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி சுஹாசினி தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக 347 புகார்கள் நிலுவையில் இருந்தன.

அவற்றில் தற்போது 141 செல்போன்களை போலீசார் மீட்டதோடு, அந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து எஸ்பி செல்வநாகரத்தினம் கூறும் போது, “கோவில் பாளையத்தை சேர்ந்த கவிதா என்பவரது செல்போன் கடந்த 2019-ம் ஆண்டு தொலைந்துபோனது. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டம் முழுவதும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து புகார் கிடைத்ததும் சி.எஸ்.ஆர் பதிவு செய்து அதனை மீட்கும் முயற்சியில் கோவை மாவட்ட போலீசார் இறங்கியுள்ளனர்.

தொலைந்து போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம். இதற்கு கால தாமதம் ஏற்படலாம். ஆனால் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்கலாம். செல்போன்களை தொலைத்தவர்களிடம் கேட்ட கருத்துக்களில் அவர்கள் அஜாக்கிரதையாக இருந்தது தெரிய வருகிறது.

Advertisment

எனவே பொது இடங்களில் செல்போன்களை வைக்காமல் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் செல்போன் கடை வைத்திருப்பவர்களிடம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். செல்போன்கள் தொலைந்து போனால் 'டிஜி-காப்' என்ற செயலி மூலம் பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.