தமிழ்நாட்டுக்கான ஆட்சிப் பொறுப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே இரவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்கிவிடுவேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழகத்தில் திமுக மட்டுமே சமூகநீதிக்காக குரல் கொடுப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறார்கள். திமுக செய்த சமூகநீதி என்ன? தமிழக மக்களுக்கு, சமூகநீதி பேசும் அவர்கள் என்ன செய்தார்கள். பெரியார் மட்டுமே சமூகநீதிக்காக குரல் கொடுத்ததைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் மட்டுமே போராடினார் என்பதை நான் மறுக்கிறேன்.
பல தலைவர்கள் சமூகநீதிக்காக தமிழகத்தில் போராடியிருக்கிறார்கள். அவர்களில் பெரியாரும் ஒருவர். ஆனால் அவர் மட்டுமே செயல்பட்டார் என்பதைப் போல ஆட்சியாளர்கள் காட்ட முயல்கிறார்கள். அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்" என்றார். மேலும், கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் மட்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை நீக்குவோம்" என்றார்.