Skip to main content

''செல்போனை ஒப்படைக்காவிட்டால் உங்களையும் விசாரிக்க நேரிடும்'' - ஸ்ரீமதி பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"If you don't hand over your cell phone, you will also be questioned" - High Court orders Mrs.

 

'கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும்' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பள்ளியானது அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி விடுதியில் இருந்தபொழுது பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு முறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் செல்போனை தற்பொழுது வரை பெற்றோர் ஒப்படைக்கவில்லை. அதை ஒப்படைத்தால்தான் விசாரணை முழுமையாக நிறைவுபெறும். விசாரணைக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் தேவைப்படும் எனவும் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது.

 

'செல்போனை ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நியாயமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்கள்' என நீதிபதிகள் மாணவியின் பெற்றோர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பு அவர் விடுதியில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தவில்லை என்றும், விடுதி காப்பாளரின் செல்போனைத்தான் பயன்படுத்தினார் என்றும் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அந்த செல்போனையும் ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மாணவியின் பெற்றோரான உங்களை விசாரிக்க நேரிடும் என எச்சரித்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.