Skip to main content

சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டால் துப்பாக்கி குண்டுகள் பாயுமா எடப்பாடியாரே!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
guns


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட முதல் சட்டரீதியாக தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற இருப்பதாக அன்மையில் செய்திகள் வெளியாகவே கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல வகைகளில் போராட்டம் நடைபெற்றது. பிப்.24 ஆம் தேதி நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அந்த கூட்டத்தை பார்த்து அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஆடிப்போனது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் சுற்றுசூழல் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதுவும் கூட மக்களின் பிரச்னையை பிரதிபலிக்கவில்லை நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்தது. அது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று மட்டுமே அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்தார். ஆனால் 100 நாட்கள் கடந்தும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 100 நாட்கள் போராட்டத்தில் மக்கள் கேட்டது "எங்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும்", "சுவாசிக்க சுத்தமான கற்று வேண்டும்", ’நிம்மதியாக வாழ வேண்டும்" என்பது மட்டும் தான்.
 

kali


100 நாட்கள் போராட்டத்தில் இதுவரை மக்களிடம் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையாக ஒரு வார்த்தையாவது இந்த அரசு சொல்லி இருக்கிறதா? மூச்சு விட முடியாமல் சிறு குழந்தையும், வயதானவர்களும் எப்படி அந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்று ஒரு முறையாவது நேரில் பார்த்தது உண்டா? உணர்ந்தது உண்டா? பல்லாயிரக்கணக்கான மக்கள் சுகாதாரமற்ற முறையில் குடிக்கக் கூடிய தண்ணீரை ஒரு முறையாவதும் நீங்கள் குடித்தது உண்டா எடப்பாடியாரே? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்ட மாவட்டமாக சிறப்பான அரசாக விளங்குவதாக தம்பட்டம் அடித்து கொண்டீர்கள் அதே நேரத்தில் நீங்கள் சென்ற மாவட்டங்களில் போராட்டம் நடத்திய மக்களை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேசி இருக்கீர்களா?

100 நாட்கள் நடைபெற்ற அமைதியான போராட்டத்தை பார்த்து உலக தமிழர்களே போராட்டத்தில் இறங்கினார்கள். உங்கள் அரசுக்கு பிரச்னையின் தீவிரத்தை வலியுறுத்தவே ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்று அரசுக்கு உணர வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் நீங்களோ எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் தடியடி, துப்பாக்கி சூடு என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை குறி பார்த்து சுட்டு வீழ்த்தியுள்ளீர்கள். சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டால் துப்பாக்கி குண்டுகள் பாயுமா எடப்பாடியாரே? இது தான் மக்கள் ஆட்சியா?
 

po


நீங்கள் உண்மையாகவே மக்களுக்கான ஆட்சி நடத்துபவராக இருந்தால் துப்பாக்கி சூட்டுக்கு பின்னர் தூத்துக்குடி விரைந்திருக்க வேண்டும் ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த அமைச்சரும், எம்.எல்.ஏக்களும் இதுவரை அங்கு செல்லவில்லை. மக்களுக்கான அரசு என்று சொல்லி கொண்டு மக்களின் பிரச்சனைகளை காதுகளில் போட்டு கொள்ளாமல் செயல்படும் அரசை மக்களே தூக்கி அடிப்பார்கள் என்பதை இந்த உலகம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் விளக்கம்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2018  ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Explanation at Rajinikanth Lawyers Commission

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3  வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.