Skip to main content

அரசை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்கா?;திருமுருகன் காந்தியின் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் பாய்ச்ச அவசியமென்ன? -சீமான் கண்டனம்

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

 

seeman

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

அரசுக்கு எதிராகப் போராடும் பேசும் அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்கூட, தனிமனித வஞ்சம் தீர்க்கம் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சனநாயகத்தின் மூலமே அடக்குமுறைகளை ஏவுகிற அரசப்பயங்கரவாதப்போக்கினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியின் மீது பல்வேறு வழக்குகள் வேண்டுமென்றே தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் பாய்ச்ச வேண்டியதன் அவசியமென்ன? இவ்வளவு நாட்கள் இந்த வழக்கினைத் தொடுக்காது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஒவ்வொரு வழக்காகத் தொடுக்கப்பட்டுத் திட்டமிட்டு அலைக்கழித்து உடல் நலிந்த நிலையிலும் சரியான சிகிக்சை அளிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கை எதற்கு? அரசுக்கு எதிரான போக்கினைக் கையாண்டால் வழக்கினைத் தொடுப்பார்கள் என்றால் இது சட்டத்தினைத் தனது அரசியல் பகைமைக்காகப் பயன்படுத்துகிற பாதகச் செயலில்லையா?

 

நேற்று விடுதலையான கருணாசு மீது ஐ.பி.எல். முற்றுகைப்போராட்டத்தின்போது பங்கேற்றதற்காக மேலும் இரு வழக்குகள் தற்போது தொடுக்கப்பட்டிருக்கிறது. கருணாஸ் பேசியவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. அக்கருத்துக்களில் நாங்களும் முழுமையாக முரண்படுகிறோம். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்று தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற தம்பி கருணாஸ் இவ்வாறு பொறுப்புணர்வற்றுப் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! இதனையுணர்ந்தே தனது பேச்சுக்கு மனம்வருந்தி கருணாஸ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படுகிறார், பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

தம்பி திருமுருகன் காந்தியைச் சிறைப்படுத்தியிருக்கிற தமிழக அரசு, தம்பி கருணாசின் பேச்சை முன்வைத்து அவரைக் கைது செய்த தமிழக அரசு, காவல்துறையினரையும், உயர் நீதிமன்றத்தையும் கொச்சையான சொற்களில் இழித்துரைத்த எச்.ராஜாவைக் கைதுசெய்யாதது ஏன்? அவரைக் கைதுசெய்வதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை என்னவானது? எட்டுவழிச் சாலைக்கெதிராக முகநூலில் கருத்துத் தெரிவித்தவர்களையும், அதற்கெதிராய் சென்னை காந்தி மண்டபத்தில் பட்டினிப்போராட்டம் நடத்த முற்பட்டவர்களையும்கூடக் கைதுசெய்து சிறைப்படுத்துகிற தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்? முதல்வரை அவதூறாகப் பேசினாரெனக் கருணாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ஆண்மையற்றவர்கள்’ என விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது ஏன் தொடுக்கப்படவில்லை.? ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் மிகத் தரக்குறைவாக முகநூலில் விமர்சித்த எஸ்.வி.சேகர் காவல்துறையின் பாதுகாப்போடு பொதுவெளியில் உலா வந்தாரே அவரைக் கைதுசெய்ய மறுத்த மர்மம் என்ன? தங்கை சோபியா விமானத்திற்குள் முழக்கமிட்டதற்குக் கைது நடவடிக்கையைப் பாய்ச்சியவர்கள், சேலத்தில் பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்டதற்கு எங்களைக் கைதுசெய்தவர்கள், கரூரில் எமது கட்சிப் பிள்ளைகள் ஆற்றைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்குக் கைது நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்திப் போன்றோருக்கு விதிவிலக்குத் தந்து பாதுகாப்பது என்பது சனநாயகத் துரோகம் இல்லையா?

 

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்தி தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தமிழக அரசின் ஒருதலைபட்சமான, பாரபட்சமுள்ள இந்நடவடிக்கைகள் யாவும் மக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். இவையாவற்றையும் தமிழக மக்களும், படித்த ஒரு இளந்தலைமுறை கூட்டமும் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும் அரசின் அத்துமீறல் போக்குகளுக்கும், அடிமை ஆட்சிமுறைக்கும் வருங்காலத்தில் முடிவுகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.