இந்திய மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “வீரவேல் என்று ஒரு இளைஞர். மீன் பிடிப்பவர். சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழக பகுதியில் தான் மீன் பிடித்துள்ளனர். அவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடியும் பறக்கின்றது. இவை அனைத்தையும் தெரிந்தும், இந்தியக் கடற்படை வந்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. அந்த படகில் 45 துளைகள் உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் குடல் சேதமடைந்து விட்டது. அவர் தப்பிப் பிழைப்பது மிகக் கடினம். பல காலமாக இலங்கை கடற்படையினை எதிர்த்து போராடியுள்ளோம். முதல்முறையாக இந்திய கடற்படையினை எதிர்த்து போராடும் அவலம். இந்திய கடற்படையின் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு காவல்துறையைப் பாராட்டுகிறோம். ஆனால் அவர்களைக் கைது செய்ய வேண்டும். தமிழக அரசுக்கும் பவர் இருக்குனு காட்டணும்.
அனைத்து விதமான படிப்புகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. அப்புறம் ஏன் அவர்களுக்கு வீராப்பு. தமிழைக் காப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். இந்தியை எத்தனையோ இடங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாங்கள் போய் தடுக்கிறோமா. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் ஏற்கனவே பயிற்று மொழியாக இருக்கிறது.
சில பேர் இந்தியை தேசிய மொழி என்றும் தமிழை பிராந்திய மொழி என்றும் சொல்லுவார்கள். அரசமைப்பு சட்டத்தின் படி இந்தியாவின் தேசிய மொழிகள் 22. அதில் தமிழும் ஒன்று. தமிழை பிராந்திய மொழி என்று யாராவது சொன்னால் செவுள்ளயே ஒன்னு வை” என்று கூறினார்.