
கடவுள் வந்து என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால் இரண்டு முக்கிய வரங்களையும், ஒரு கொசுறு வரமும் கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக விழா வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''என்னை ஒரு குறுகிய வட்டத்தில் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்கள் சேர்த்து விட்டார்கள். ஜாதி ஜாதி என ஒரு குறுகிய வட்டத்தில் என்னை சேர்த்து விட்டார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்வார்களே மும்மூர்த்திகள் இந்த ராமதாஸ் முன்னாலே வந்து ராமதாஸ் உனக்கு என்னப்பா வேண்டும் எனக் கேட்டால், எனக்கு இரண்டே இரண்டு வரம், ஒரு கொசுறு வரம் வேண்டும் என கேட்பேன்.
என்ன இரண்டு வரம். முதல் வரம் ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு. இரண்டாவது வரம் ஒரு சொட்டு நீர் கடலுக்குப் போகக்கூடாது. எக்கச்சக்கமான டிஎம்சி தண்ணீர் கடலில் போய் சேர்க்கிறது. அதைக் கொஞ்சம் திருப்பினால் தமிழ்நாடு உயரும். இன்னொரு கொசுறு வரம் எங்கும் கஞ்சா விற்கக் கூடாது. இப்பொழுது தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்து இருக்கிறது கஞ்சா விற்பனை. கட்டாயக் கல்வி; தரமான கல்வி; கட்டணம் இல்லாத கல்வி; சுகமான கல்வி; சுமை இல்லாத; கல்வி விளையாட்டுடன் கூடிய கல்வி. இதுதான் நமது கொள்கை'' என்றார்.