
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டின் பின்புறம் தாண்டவமூர்த்தி, குமார் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. தங்களது நிலத்தை விற்க வசதியாக அங்கு உள்ள அரசு நிலத்தைச் சாலை அமைக்க தாண்டவமூர்த்தி, குமார் ஆகியோர் ஆட்களுடன் வந்தாகவும், அப்போது தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதனைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் தாண்டவமூர்த்தி, குமார் தரப்பினர் அரிவாளால் எதிர்த்தரப்பினரை வெட்டியதாகவும், இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும்கூறப்படுகிறது. லட்சுமிபதி தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குத்தாண்டவமூர்த்தி, குமார் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த வழியே சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக நான்கு டி.எஸ்.பி.-க்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனிவாசனை எம்.எல்.ஏ.-தான் சுட்டுள்ளார். எம்.எல்.ஏ. இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)