Advertisment

''நான் வீட்டுக்கு போறேன்... ரொம்ப சந்தோசமா இருக்கு''- மகிழ்ச்சியில் தான்யா!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் தான்யா, வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தான்யாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி எனப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில், நாளடைவில் அந்தப் புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியைச் சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளைத் தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை.

Advertisment

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி தான்யா தெரிவிக்கையில், ''பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு'னு சொல்வாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க. முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு'' என்றார் ஏதுமறியா மழலை குரலில்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை முடிந்தது. மொத்தம் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்திருந்தது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி தான்யா வைக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

அண்மையில் சிறுமி தான்யாவின் சிகிச்சைக்கு பிறகான புகைப்படம் வெளியானது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து சிரித்த முகத்துடன் சிறுமி தான்யா வீட்டிற்கு கிளம்பினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தான்யா '' எனக்கு இந்த கன்னம் சரியாகிடுச்சு. நான் வீட்டுக்கு போகப்போறேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு'' என்றார் மீண்டும் அதே மழலை குரலில்.

avadi TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe