
பூவிருந்தவல்லி அருகே தற்கொலை செய்துகொள்ள செல்ஃபோன் டவர் மீது ஏறிய பெண் ஒருவர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால்தான் கீழே இறங்குவேன் என அடம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அவருடைய மனைவி ராஜிலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கன்னியாகுமரியில் வசித்து வந்த ராஜிலா அண்மையில் திரும்பவும் திருவேற்காடு வந்து கணவனிடம் பணத்தையும் நகையையும் வழங்கும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதனையடுத்து பூவிருந்தவல்லியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகாரளிக்க வந்துள்ளார் ராஜிலா. அப்பொழுது புகாரை போலீசார் பெறுவதற்கு காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற ராஜிலா காவல் நிலையத்தின் அருகே இருந்த 200 அடி உயர செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கீழே இறங்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜிலா, திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக தெரிவித்தார். இதனையடுத்து பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து தன்னை உதயநிதி ஸ்டாலின் தான் அனுப்பியுள்ளதாகவும், உங்களிடம் காணொளி மூலம் அவர் உரையாட தயாராக இருக்கிறார் எனவும் கூறியதையடுத்து அந்தப் பெண் கீழே இறங்கினார். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.