Skip to main content

“அவர் இறந்த பொழுது ரொம்ப பயந்தேன்.... ஆனால் இப்போ...”- நெகிழ்ந்த வானதி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் - சீன ராணுவம் இடையேயான மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைமையகத்தில் அண்ணாமலை முன்னிலையில்  சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கணபதி சுப்பிரமணியம், மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதியிடம் ஒரு கிரவுண்ட் வீட்டுமனையை வழங்கினார். மேலும் தனது கணவர் பழனியின் உருவச்சிலையைச் சீதக்காதி ஸ்டேடியத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

 

அவரது கோரிக்கையை ஏற்றுப் பேசிய அண்ணாமலை, இந்த விஷயத்தில் அரசியலை உட்புகுத்தாமல் நிச்சயமாகப் பழனியின் உருவச்சிலையை நிறுவாமல் ஓய மாட்டோம் என உறுதியளித்தார். அதன் பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மறைந்த ராணுவ வீரரின் மனைவி கூறியதாவது, “என் கணவர் என்னைத் தனியாக விட்டுப் போகவில்லை; எல்லாரும் இருக்காங்க என்பதை ஒரு உணர்வுப் பூர்வமாக நான் பார்க்கிறேன். யாரென்றே தெரியாத ஒருவர் ஒரு சொந்தமா அப்பாவா, அம்மாவா நான் இருக்கேன் என்று பக்கத்தில் இருப்பது ஒரு மிகப் பெரிய செயல். இந்த சமூகத்தில் தொடர்ந்து வாழ முடியுமா என்பதை நினைத்து அவர் இறந்தபொழுது ரொம்ப பயந்தேன், ஆனால் அதன்பின்பு நிறைய நல்ல விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நான்.

 

ஒரு ஆட்டோகாரங்ககூட பழனி அண்ண பேமிலி பார்த்துக்கொண்டுபோய் இறக்கி விட்டு வாங்கனு சொல்றாங்க. இந்த மக்கள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கணவர் இருந்தா என்ன பாதுகாப்பு, அரவணைப்பு கொடுப்பாரோ அதை மக்களிடம் நான் பார்க்கிறேன். அதைப் பார்ப்பதோடு மட்டுமின்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த விஷயத்திற்காகக் கணபதி சுப்பிரமணியம் அப்பாவிற்கு உண்மையாகவே ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கிறேன். இதனை நான் என் கணவருக்குக் கிடைத்த பெரிய மரியாதையாகத் தான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப என் பையன் ஆர்மிக்கு போவேன்னு சொல்றான், ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் போகனும் அதற்கு இதெல்லாம் மிகப் பெரிய வழிகாட்டியா இருக்கும் என நம்புறேன்” எனத் தெரிவித்தார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.