Skip to main content

'நேற்று தான் எனக்கு விடுதலை கிடைத்தது; நம் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும்'-அன்புமணி பேச்சு (படங்கள்)

Published on 30/05/2025 | Edited on 30/05/2025

 

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும்  இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி இன்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, ''எனக்கு சொந்த வீடு தி.நகரில் இருக்கிறது. திநகரில் உள்ள பகுதிச் செயலாளர் மோகன் குமார் எனக்கு இந்த அட்டையை கொடுத்தார். இந்த அட்டையில் க்யூஆர் கோடு இருக்கும். அதை ஃபோனில் வைத்து ஸ்கேன் செய்தால் அதில் உங்கள் ஆசைப்படி பணம் அனுப்பலாம். அதுவே பணம் எடுத்துக்காது. நீங்களாக மனசு வைத்து காசு போட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கு நீங்கள் இந்த அட்டையை கொடுக்கும் பொழுது தம்பி அண்ணன் அன்புமணி எங்க தலைவர் உங்ககிட்ட அஞ்சு ரூபாய்க்கு கேட்டார். அஞ்சு ரூபாய் போதும். போனிலேயே நீங்கள் ஸ்கேன் பண்ணி ஐந்து ரூபாய் போட்டு விடுங்கள். ஐந்து ரூபாய்க்கு மேலேயும்  போடலாம்.

அண்மையில் உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் மாநாட்டை நடத்தினோம். இந்த மாநாட்டை நான் நடத்தவில்லை நீங்கதான் நடத்தினீர்கள். முக்கியமாக நான் சொல்வது மாவட்டச் செயலாளர்கள்; அந்தத் தொகுதி நிர்வாகிகள்;  வருவாய் மாவட்ட நிர்வாகிகள்; அதற்கு கீழ் உள்ள நீங்கள் எல்லோரும் உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றி மாநாட்டை நடத்தினீர்கள். இன்று காலையில் ஒரு லெட்டர், நமது பொருளாளர்  திலகபாமாவை மாற்றுவதாக வெளியிட்டார்கள்.

அடுத்த நிமிடமே திலக பாமாதான் பொருளாளர் என நான் ஒரு லெட்டர் கொடுத்தேன். ஏனென்றால் அவரை எடுப்பதற்கு எனக்கும் அதிகாரம் இல்லை. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழு உங்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. நீங்கள் தான் பொதுக்குழு. நானும், பொதுச்செயலாளரும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் நினைத்தால் தான் எங்களை நியமனம் செய்ய முடியும். உங்களால் தான் எங்களை எடுக்க முடியும். வேறு யாராலும் செய்ய முடியாது. இதுதான் நம்முடைய கட்சியின் விதிகள்.

மனதில் நிறையாக இருக்கிறது. ஆனால் பேச முடியவில்லை. என்று என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்களோ அன்றிலிருந்தே எனக்கு மன உளைச்சல் தான். நேத்து தான் எனக்கு விடுதலை கிடைத்தது. இன்று நாம் வேகமாக போகலாம். நான் தாயார். எந்த தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து நாம் முன்னேறுவோம். கட்சியை தொடங்கிய ராமதாஸின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்போம். அவருடைய கொள்கைகள்; கோட்பாடுகள்; சமூக நீதி சமத்துவம்; ஜனநாயகம் கடைபிடித்து அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்வோம். வருகின்ற தேர்தலில் நாம் இடம்பெறும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அடுத்த கட்டம் நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும். 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரச்சாரம் ஒரு வருடம் இந்தியா முழுவதும் போச்சு. பிரச்சாரம் வெற்றி பெற்றது நாம் வெற்றி பெற முடியவில்லை. அன்று கலைஞர் ஒரு பக்கம் ஜெயலலிதா ஒரு பக்கம் இருந்தார்கள். அதே பிரச்சாரம் 2019 ல் நாம் செய்திருந்தோம் என்றால் இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். அதை பண்ண முடியாத சூழ்நிலை. அது என்னவென்று உங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இங்கு தான் பேச வேண்டாம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்