
சென்னையில் நடைபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசுகையில், ''இந்த மாணவர்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது ஏதோ ஒரு விதத்தில் வேறு சிந்தனையில் இருந்தாலும் கூட, அவர்கள் என்னை கவனிக்கவில்லை, மேடையை கவனிக்கவில்லை என்றாலும் கூட நான் அவர்களை பார்க்கின்ற பொழுது என்னுடைய மாணவ பருவம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு பழுத்த காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். காங்கிரஸ்க்காக சிறுவயதில் காளை மாட்டுச் சின்னத்தில் ஓட்டு கேட்பவர்களோடு கூடவே போன ஒரு ஐந்து வயது சிறுவன் நான். இன்றைக்கும் என்னுடைய குடும்பத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் நான் மட்டும் திமுகவில் மத்திய அமைச்சராக, துணைப் பொதுச் செயலாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக எப்படி வந்தேன் என்றால் என் மாணவர் பருவத்தில் என்னுடைய மனக்குளத்தில் எறியப்பட்ட ஒரு கல் தான் காரணம்.
அந்த கல் கலைஞர். பேசாமல் உட்கார்ந்து இருந்தேன் 'தமிழ் ஒப்பித்தல்' போட்டி நடக்குது நீ இந்த கவிதையை மட்டும் படித்தால் பரிசு கிடைக்கும் என என்னுடைய வாத்தியார் சொன்னார். நான் சிவனே என காலையில் நெற்றில திருநீறு வச்சிக்கிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன். சரி வாத்தியார் சொல்கிறாரே என அந்த கவிதையை எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு கவிதையை முழுமையாக மனப்பாடம் செய்து ஒப்பித்தேன். ஒரே கைதட்டல் ஒரே பரிசு மழை. பள்ளிக்கூடத்தில் முதல் பரிசு. மாவட்டத்தில் முதல் பரிசு. மாநிலத்தில் முதல் பரிசு. அப்படியே பேசிப் பேசி வந்து தான் கலைஞர் என்ற ஒரு மனிதனை படித்த காரணத்தினால் அண்ணாவைப் படித்தேன். அண்ணாவை படித்ததால் பெரியாரைப் பிடித்தேன். பெரியாரைப் படித்ததால் அம்பேத்கரை படித்தேன். அம்பேத்கரை படித்ததால் மார்க்சை படித்தேன். இன்று உங்கள் முன்னால் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இந்த மாணவப் பருவத்தில் என் மீது கலைஞர் என்ற மகத்தான மனிதரை விதைத்த என்னுடைய ஆசிரியர்தான்'' என்றார்.