I wanted to take Jayalalithaa abroad like MGR

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 07/03/2022 அன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதேபோல் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக சசிகலாவின் அண்ணன் மகள் இளவரசி ஆஜராகியுள்ளார். எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் இன்று ஆஜராகினார்.

இன்று ஓபிஎஸ்-சிடம் நடைபெற்ற விசாரணையில், 'ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரம் தமக்கு எதுவும் தெரியாது. அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தெரியாது. 2016ஆம் ஆண்டு செப்.22ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தெரியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரை நான் பார்க்கவில்லை. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிகழ்வில்தான் அவரைப் பார்த்தேன். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் நான் ஊரில் இருக்கும்பொழுது வந்தது. சர்க்கரை அதிமாக இருந்தது என்பதைத் தவிர அவருக்கு இருந்த மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு தெரியாது' என ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

கடந்த 2 மணிநேரமாக அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்பின்னர் உணவு இடைவேளைக்காக ஓபிஎஸ் வெளியே வந்தார். அதன்பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ''ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக விஜயகுமார் தெரிவித்தார். ஒரு வாரத்தில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவர் என்னிடம் கூறியிருந்தார். விஜயபாஸ்கர், ராமமோகன்ராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர். அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும்வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என்றேன். ஆனால் அப்பல்லோ மருத்துவர்களிடம் பேசிய பிறகு வெளிநாடு செல்லலாம் என விஜயபாஸ்கர் சொன்னார். அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகனிடமும் இதே கருத்தை வலியுறுத்தினேன். பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணைய கோப்பில் துணை முதல்வர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டேன்'' என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.