சேலத்தில் நகைக்கடையில் 43 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகளைத் திருடி ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம் விளையாடி இருப்பது தெரியவந்தது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஒரு நகைக்கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையில் அன்றாடம் வர்த்தக செயல்பாடுகள் முடிந்த பிறகு இருப்பு உள்ள நகைகள் சரிபார்க்கப்படுவது வழக்கம். சில நாள்களுக்கு முன்பு நகைகளைச் சரிபார்த்தபோது கையிருப்பு நகைகளில் எடை குறைவாக இருப்பது தெரியவந்தது.
கடை நிர்வாகிகள் விசாரணை நடத்தியதில், கடந்த 13 ஆண்டுகளாக அந்தக் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தீபக் (29), கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் லட்சுமணன் சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், தீபக் 145 பவுன் (1.160 கிலோ) நகைகளைச் சிறிது சிறிதாக திருடி இருப்பதும், அதன் மதிப்பு 43 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, தீபக்கை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தீபக் அளித்த வாக்குமூலத்தில், ''நகைக்கடையில் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை. ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம் விளையாட பணம் தேவைப்பட்டது. அதனால் நகைகளைத் திருடி அவற்றை அடகு வைத்தும், சிலவற்றை விற்பனை செய்தும் செலவு செய்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, விரைவில் அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.