Skip to main content

எப்பேர்பட்ட பூட்டையும் சத்தமில்லாமல் திறந்து விடுவேன்! பிடிபட்ட திருடன் பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சேலத்தில் புதன்கிழமை பிடிபட்ட பிரபல திருடன், எப்பேர்பட்ட பூட்டையும் திறந்து விடுவேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (65). செவ்வாய்க்கிழமை (பிப். 25) வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். புதன்கிழமை அவர் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 I open the lock quietly salem police

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 3 மணியளவில், சேலம் சூரமங்கலம் ரயில்நிலையம் அருகில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், விழுப்புரத்தைச் சேர்ந்த அருங்குணம் மகன் சங்கர் என்கிற ஜெய்சங்கர் (39) என்பதும், அவர்தான் அங்கமுத்து வீட்டில் நகைகளை திருடியவர் என்பதும் தெரிய வந்தது.


இதையடுத்து அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் நடந்த மற்றொரு திருட்டு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


கோட்டகவுண்டன்பட்டி மேகநாதன் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய 2.25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருள்களையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. வீடுகளில் பூட்டை நெம்பி திறப்பதற்கு பயன்படுத்திய இரும்பு ராடுகள், கடப்பாரை, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 I open the lock quietly salem police

இதுகுறித்து திருடன் சங்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''திண்டுக்கல் பூட்டு முதல் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட பூட்டு வரை எந்த வகையான பூட்டாக இருந்தாலும் யாருக்கும் சத்தம் கேட்காத வகையில் இரும்பு ராடு, ஸ்க்ரூ டிரைவர் மூலம் திறந்து விடுவேன்,'' என்று கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் அவர் மீது 30- க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், கடந்த ஆண்டு ஒரு குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது