Skip to main content

“அவமானத்தால் கூனிக் குறுகி எம்பெருமான் அரங்கநாதனின் கோயிலிலிருந்து வெளியேறினேன்..” - நடன கலைஞர் ஜாகீர் உசேன்

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

“I left the temple of Aranganathan. ”- Dancer Zakir Hussain

 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (10.12.2021) அன்று புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் வந்திருந்தார். அப்போது ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ஜாகீர் உசேனை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தார். ரங்கராஜன், ஜாகீர் உசேனை தடுக்கும்போது, “இந்துக்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உள்ளது. நீங்கள் எப்படி வரலாம்” என்று கூறி தடுத்து நிறுத்தியிருக்கிறார். 

 

‘கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் நூற்றுக்கணக்கான பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரு கலைஞனை இப்படி அவமானப்படுத்துவதா? குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திய ஜாகிர் உசேனை  உள்ளே அனுமதிக்காமல் தடுப்பதை எப்படி ஏற்பது” என்று ஜாகிர் ஹுசேனின் நண்பர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்ததாவது, “கோவில் நிர்வாகம் யாரையும் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று மறுக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கென்று சில நிபந்தனைகளுடன் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ரங்கராஜன், பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனை தடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்” என்றார். 

 

ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து அதனை சந்தித்துவருபவர் ரங்கராஜன் நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் சமூக நல்லிணக்க விருது பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்துவருகிறார். அவர் திருச்சி காவல்துறை ஆணையரிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும், வாழ்வில் ஒரு வைணவனாகவே வாழ்ந்துவரும் நான், பல வைணவத் திருத்தலங்களின் திருப்பணிகளை செய்திருக்கிறேன். நேற்று (10ஆம் தேதி) நண்பகல் அமைதியான முறையில் திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க கோயிலுக்குள் சென்ற என்னை ரங்கராஜன் நரசிம்மன் எனும் நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு மத, சாதி அடையாளத்தைக் கொச்சையாக, தகாத சொற்களால் பேசி ஆலயத்துக்குள் நுழையவிடாமல் நெட்டித்தள்ளி வெளியேற்றப்பட்டேன். சம்பவம் நடந்தபோது அங்கு பல பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் இருந்தனர். சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறது. இதுநாள்வரை திருவரங்கக் கோயில் நிர்வாகிகளும், கோயில் அர்ச்சகர்களும் என் பிறப்பின் அடிப்படையில் எனக்கு அனுமதி மறுத்ததில்லை.

 

“I left the temple of Aranganathan. ”- Dancer Zakir Hussain

 

ஆனால், சம்பவம் நடந்தபோது யாரும் அவரைத் தடுக்கவும் இயலவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். காரணம், என்னை மதத்தின் பெயரால் மிகவும் சத்தம் போட்டு கூட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தியதே ஆகும். அவமானத்தால் கூனிக் குறுகி எம்பெருமான் அரங்கநாதனின் கோயிலிலிருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று திரும்பினேன். எனக்கெதிராக ஒரு தீண்டாமையை நிகழ்த்தி, இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் எதிராக செயல்பட்டதற்கு சம்பந்தப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனை உடனடியாகக் கைதுசெய்து விசாரித்து, உரிய நீதி வழங்கிட வேண்டும்’ என அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.