Skip to main content

“ரஜினி மீது வழக்கு தொடருவேன்..”  மக்கள் மன்ற நிர்வாகி ஆவேசம்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

I gonna file case against rajinikanth R.S.Rajan

 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு, 2017 டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் என தீவிரமாக ஈடுபட்டனர்.

 

இந்த நிலையில் திடீரென்று ரஜினி, தனது உடல் நலம் கருதி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விரும்பிய அரசியல் கட்சிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சேரலாம் என ரஜினி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்த வண்ணம் உள்ளனர்.

 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரஜினியைக் குறித்தும், ரஜினி மக்கள் மன்றத்தைக் குறித்தும் தவறான கருத்துக்கள் வெளியிட்டதாகக் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ஆா்.எஸ்.ராஜன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சதீஷ் பாபு, மகளிரணிச் செயலாளர் ஈஸ்வரி ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆா்.எஸ்.ராஜன், “நான் 1986-ல் இருந்தே ரஜினி ரசிகராக இருந்துகொண்டு மன்றத்தின் பெயரில் பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வந்தேன். ரஜினி அரசியல் கட்சி துவங்குவேன் என்று அறிவித்த அன்றே நான், காங்கிரஸ் கட்சியில் வகித்துவந்த மாநில விவசாயக் காங்கிரஸ் செயலாளர் பதவியை ராஜினமா செய்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் முழுநேர அரசியல் பணிகளை செய்து வந்தேன். 

 

அன்றிலிருந்து ரூ. 13.50 லட்சத்தை ரஜினி மக்கள் மன்றத்துக்காகப் பல்வேறு ரீதியில் செலவு செய்துள்ளேன். அவருடைய ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னதுக்கு சமம்’ என்ற வசனத்தை நம்புவதுபோல், ஒரே முறை அரசியல் கட்சி துவங்குவதாகச் சொன்னதை அப்படியே நம்பினேன்.

 

ரஜினி மக்கள் மன்றத்தில் இணைச் செயலாளர் பதவியை, மக்கள் மன்ற நிர்வாகி என்னிடம் ரூ. 50 ஆயிரம் வாங்கிக்கொண்டுதான் தந்தார். ரஜினியுடன் இணைந்து நல்ல ஒரு அரசியல் பயணத்தைத் தொடரலாம் என்று நம்பியிருந்த என்னைப் போன்ற லட்சக்கணக்கானோரை அவர் ஏமாற்றி விட்டார். மேலும் ரஜினியை நம்பி காங்கிரஸ் கட்சியில் சீனியர் அந்தஸ்த்தையும் இழந்துவிட்டேன். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட்டேன். எனவே, ரஜினி மீது மானநஷ்ட ஈடு வழக்கும், சுதாகர் மீதும் வழக்கு போட இருக்கிறேன்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.