Skip to main content

‘எந்தத் தவறும் செய்யாத எனக்கு....?’ -கண்ணீருடன் கர்ப்பிணித்தாய் புகார்!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

அரசு மருத்துவமனைகளின் தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

blood


அந்த மனுவில் ‘எனக்கு கடந்த 21-8-2015 –ஆம் தேதி, சாத்தூர் முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. எங்களுக்குக் காளீஸ்வரி (வயது 3) என்ற மூத்த மகள் இருக்கிறாள். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். கர்ப்பமான நாளிலிருந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடர் சோதனை எடுத்து வந்தேன். கடந்த 3-ஆம் தேதி, என்னைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை ட்யூட்டி பெண் டாக்டர் எனக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், ரத்தம் செலுத்த வேண்டும் என்று கூறினார். என்னுடன் வந்த என் கணவர் தங்கப்பாண்டியிடம், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கிவர கடிதம் தந்தார். என் கணவர் அந்தக் கடிதத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கி வந்தார். அன்றைய தினமே எனக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் செலுத்திய 3-ஆம் தேதியிலிருந்தே குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. அதனை மருத்துவரிடமும் செவிலியர்களிடமும் சொன்னேன். அதற்கு மருத்துவரும், செவிலியர்களும் ரத்தம் செலுத்தப்பட்டால், சிலருக்கு காய்ச்சல் வரும். போகப்போக சரியாகிவிடும் என்றார்கள். 

 

blood


கடந்த 5-ஆம் தேதி, உள்நோயாளியாக இருந்த என்னை ட்யூட்டி டாக்டர் டிஸ்சார்ஜ் செய்தார். வீட்டிற்குச் சென்றதும் எனக்கு காய்ச்சல் அதிகமானது. குளிர் அதிகமானதால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. என்னால் தாங்க முடியவில்லை. எனவே, 17-ஆம் தேதி மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் மாதிரி ரத்தம் எடுக்கச் சொன்னார். அதேபோல் எடுத்து சோதித்தார்கள். அப்போதே எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்ட விபரம் டாக்டருக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், என்னிடம் சொல்லவில்லை. மாறாக, 18-ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு என் ரத்தத்தை எடுத்து சோதித்த டாக்டர், எனக்கு எச்.ஐ.வி. நோய் உள்ளது என்ற விபரத்தைக் கூறினார். எனக்கு அதிர்ச்சியும், கடுமையான மன உளைச்சலும் ஏற்பட்டது. எந்தத் தவறும் செய்யாத எனக்கு எச்.ஐ.வி. நோய் ஏற்பட, சாத்தூர் அரசு மருத்துவமனையில் எனக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்தான் காரணம். எனக்கு இந்த நோய் ஏற்பட, அரசு டாக்டர்கள் மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனையும்தான் காரணம். அரசு டாக்டரின் கவனக்குறைவு எனக்கு இந்த நோய் ஏற்பட மூலகாரணம் ஆகும். அதனால், எனக்கு உடலில் அதிகவலி ஏற்பட்டது. என் உயிருக்கும் என் வயிற்றில் உள்ள 9 மாத குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அரசு டாக்டரின் கவனக்குறைவினால், நான் நிரந்தர எச்.ஐ.வி. நோயாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். சமூகத்தில் என்னைப்பற்றி தவறுதலான எண்ணத்தை ஏற்படுத்தி, என்னைக் களங்கப்படுத்திவிட்டார்கள். நான் பட்ட மானநஷ்டத்திற்கு அரசு டாக்டர்களும், செவிலியர்களும்தான் காரணம். எனது குடும்பமே மிகவும் மனஉளைச்சலும், மன வேதனையும் அடைந்து, அவமானப்பட்டு நிற்கிறது. 

 

blood

 

ஆகையால், சார்பு ஆய்வாளர் அவர்கள் எனக்கு எச்.ஐ.வி. வருவதற்குக் காரணமான, எனக்கு வைத்தியம் பார்த்த ட்யூட்டி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

blood

 

குமுறலுடன் தனது மனுவை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடமும் முத்து அளித்திருக்கும் நிலையில்,  இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஆணையத் தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரன். 

 

எச்.ஐ.வி. பாதிப்பையும், வயிற்றில் ஒன்பது மாதக் குழந்தையையும் சுமந்தபடி, சட்ட ரீதியான நியாயம் கிடைப்பதற்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முத்து!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.