/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv_10.jpg)
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சவாலாக கூறுகிறேன் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்கள் இல்லாத இயக்கம் அதிமுக எனவும், அதிமுகவில் இருந்த உயிரோட்டமான தொண்டர்கள் அமமுகவிற்கு இடம் பெயர்ந்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.
ஆட்சி, அதிகாரத்தை வைத்துக் கொண்டு, இரண்டு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, சுற்றுலா செல்லலாம் என வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து சென்று தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக காட்ட முயற்சிக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
அரசு நிகழ்ச்சி வழக்கப்படி அழைப்பிதழில் சட்டமன்ற உறுப்பினரான தன் பெயரை சேர்த்துள்ளனர் எனவும், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை எனவும் அவர் கூறினார். அமமுகவின் பிளக்ஸ், பேனர்களை காவல் துறை அகற்றுவது கேவலமாக உள்ளது எனவும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிளக்ஸ், பேனர்களை அகற்ற வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவை கேட்பார்களா என கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்றம் சொல்லியும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை தமிழக அரசு கைது செய்யவில்லை என தெரிவித்தார். அமைச்சர் பதவி இருப்பதால் ஆர்.வி.உதயகுமார் மேதாவி போல பேசுகிறார் எனவும், அமைச்சர் பொறுப்பில்லை எனில், யாரும் அவரை சீண்டமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சவாலாக கூறுகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)