ADVERTISEMENT

"அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை.." - மு.க.ஸ்டாலின் பேச்சு

07:48 PM Jul 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT



கொங்கு மண்டலம் எனப்படுகிற மேற்கு மண்டலத்தின் கிழக்கு வாசலாக உள்ள கரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1,2 ஆகிய இரு நாள் பயணமும், ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வும் அடுத்து 3 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு பிரமாண்ட விழாவாக நடந்தது, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், நடைபெற்று முடிந்த பணிகளை திறந்து வைத்தும், தொடர்ந்து செய்ய வேண்டிய மக்கள் நல திட்டங்களைத் தொடங்கி வைப்பது என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக முதல்வராக பொறுப்பேற்றபின் முதன் முதலாக கரூருக்கு 1 ந் தேதி மாலை வந்தார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் வரும்வரை இருபுறமும் மக்கள் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். இரவு 8 மணிக்கு கரூர் பயணியர் விடுதிக்கு வந்தபோது அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஏற்பாடு செய்யப்பட்ட கரூர் மாவட்ட,நகர தொழில் முனைவோர்கள் குறிப்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் காத்திருந்தனர். ஜவுளி தொழிலில் ஏற்பட்ட தேக்கத்திற்கு என்ன காரணம்? அதை முன்னேற்ற செய்ய என்ன செய்ய வேண்டும் என ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தொழில் முனைவோர்களையும், இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர் குடும்பங்களையும் தி.மு.க. அரசு காப்பாற்றும் என்ற உறுதியை முதல்வர் வழங்கினர்.

2 ந் தேதி காலை 85 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் நகரம் முழுக்க மக்கள் கடல்போல் திரண்டிருந்தனர். விழா பந்தலில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பிரமாண்டத்தை ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியை தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் மேடை ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.

"ஒருபுறம் அமராவதி மறுபுறம் காவேரி என கரூரில் இரண்டு நதிகள் ஓடுவதுபோல தமிழக முதல்வர் தனது இரண்டு திருக்கரங்களால் கரூரை காக்கிறார்" என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திராவிட பேரரசே"... என்ற கவிதையை வாசித்தார். அதை ரசித்த முதல்வர்,

பிறகு பேசுகையில்,

"கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். இங்கிருப்போரின் முகங்களில் திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் ஒரு சில அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் கூற தயாராக இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

தந்தை பெரியார் கூறுவார், மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தை பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

ஊடக துறையினரிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன், திமுக ஆட்சியானது எப்படி செயல்படுகிறது என்பதை இது போன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். பெண்களிடம் கேளுங்கள், இருளர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலைக்கு கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியைப் பற்றி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூக நீதிக்காக போராடுபவர்களிடம் கேளுங்கள், அவர்கள் இந்த ஆட்சியின் சாதனை பற்றி சொல்வார்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு, அதனைச் செயல்படுத்தி தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என நான் நினைப்பவன் அல்ல.

அப்படி மக்களிடம் கருத்துக்களை பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்களும் இருக்கிறோம் என்பதை தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நாள்தோறும் மைக் முன்னால் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கும் நான் பதில் சொல்வதற்கு என்றைக்கும் தயாராக இல்லை.

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் என்னை எதிர்த்து கருத்துச் சொல்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழக மக்களின் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என விரும்புகிறவன் நான், அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மக்களுக்கு பயன் தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என நினைக்கின்றேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதல்வர் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்க காரணம் என்ன? மக்களுக்கு இந்த ஸ்டாலின் நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில்தான், அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன்.

கரூர் என்றாலே பிரம்மாண்டம தான். அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கும் மற்றொரு பிரமாண்டத்தை செய்ய முடியும். கடல் இல்லா கரூரில் மக்கள் கடலை ஏற்படுத்திவிட்டார் செந்தில் பாலாஜி.." என உள்ளப் பூரிப்புடன் கூறி மீண்டும் மக்கள் கடலில் நீந்தி நாமக்கல் சென்றார் முதல்வர். அங்கும் திரும்பிய திசையெல்லாம் ஆண்கள், பெண்கள், என மலர்ந்த முகங்கள்தான்.

பா.ஜ.க. அண்ணாமலையை அடையாளப்படுத்தாமல் செய்த முதல்வரின் விமர்சனமும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உழைப்பை முதல்வர் பாராட்டியதும் கரூர் மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT