
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்காக 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை வளர்க்கும் சீரிய தொலைநோக்கு பார்வையோடு செயல்படும் தமிழக அரசு, 2026ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் இரண்டு மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வினை திருச்சி மரக்கடையில் உள்ள அரசு சையது முஸ்தபா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காணொளி காட்சி வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட சுமார் நூறுக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு இதனை பார்வையிட்டனர்.