Skip to main content

‘நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு’ - கமல் பேச்சு

Published on 07/10/2018 | Edited on 08/10/2018
kl

 

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்  பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். 

 

kk

 

’’இது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன்  அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான்.

 

kk

 

டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறார்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன்’’ என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.

 

விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.