Skip to main content

நாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும் தயார் - டெல்டா பெண்களின் உருக்கம்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு வாரத்தை தொட்டுவிட்டது. ஏழாவது நாளான இன்று தேவாலயங்களில் பிரார்த்தனையும், வெட்டவெளியில் பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

hdc

 

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், உணவுத்தேவையில் 70 சதவிகிதத்தை பூர்த்திசெய்துவரும், தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை நடத்த வேதாந்தா என்னும் ஸ்டெர்லைட் குழுமத்திற்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டாவின் விவசாயம் முற்றிலும் அழிந்து வறண்ட பாலைவனமாக மாறிவிடும். நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்வதோடு குடிநீருக்கே ஆபத்து ஏற்படும். பஞ்சம் தலைவிரித்து ஆடும். இதை உணர்ந்த பொதுமக்கள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்துவிவசாயிகள் சங்கம் என போராட்டத்தில் ஈடுபட்டுவந்தாலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே விவசாயிகள் பொதுமக்கள் ஆங்காங்கே தனியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நீடாமங்கலம் கூத்தநல்லூர், உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 

 

ஒப்பாரி போராட்டம் நடத்தி வரும் பெண்களிடம் விசாரித்தோம். "எங்களுக்கு அரைவயிறு, கால்வயிறு கஞ்சி ஊத்துறதே இந்த பூமிதான். இதையும் மலடாக்க துடிக்கிறார்கள். இதை மலடாக்கவிட்டுட்டு நாங்க உசுரு வாழ்ந்து என்ன பிரயோஜனம். இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக நாங்க உயிரைவிடவும் தயாராகிட்டோம். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் இல்லாமலும், மழை இல்லாலும், வாய்க்கா வரப்பு, குளங்கள் தூர் வாராமலும், கோடை மழையும் இல்லாமலும் பசுமையான பகுதியெல்லாம் வரண்டுகிடக்கு.  இந்த நிலைமையில இவங்க குழாய் போட்டு தண்ணீரை உறிஞ்ச சல்லடைபோல் பொத்தல் போட்டுட்டா எங்க நிலத்தோட நிலைமை என்ன ஆகும். வரும் காலத்துல நாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும் தயாராகி விட்டோம்." என்கிறார்கள் உருக்கமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக அரசைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 

struggle front of BSNL office condemning Karnataka Govt

 

கர்நாடகா அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றிக் கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.    

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Next Story

தவிச்ச பயிறுக்கு உசுரு தண்ணீர் ஊற்றும் டெல்டா விவசாயிகள் 

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Delta farmers who pour water  to their distressed crops

 

‘தவிச்ச வாய்க்கு ஒருவாய் தண்ணீர் கிடைக்குமா’ என்கிற ஏக்கத்தில் டெல்டா மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள் காத்துக்கிடக்கின்றன. பயிர்களைக் காப்பாற்ற குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரைக்கொண்டு தெளிக்கும் அவலமான சூழல் நிலவி வருகிறது.

 

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரிப்பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடைமடைப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒருமுறையும், பல கிராமங்களுக்கு இன்றுவரை தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. மேட்டூர் தண்ணீரை நம்பி குருவை சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். 

 

சில விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றி வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது முப்போகம் விளைந்த மண்ணுக்கு வந்த சோதனையப் பாரு என்று கலங்கும் நிலையே இருக்கிறது. 

 

Delta farmers who pour water  to their distressed crops

 

நேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில், பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பயிரைக் காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமெனவும், தமிழக அரசுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பயிர்களுக்கு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து தெளித்துவரும் விவசாயிகளோ, “வழக்கத்தை விட இந்த வருஷம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு. பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதை காப்பாற்ற தற்காலிக முயற்சியாக நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை குடங்களில் எடுத்துவந்து தெளித்து வருகிறோம். கிட்டத்தட்ட தவிச்சு நிற்கும் பயிருக்கு உசுரு தண்ணீர் ஊற்றி வருகிறோம் என்றுதான் சொல்லணும். இதுபோல எத்தனை நாளுக்கு ஊத்த முடியும்னு தெரியல, எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற அரசு முயற்சிக்கணும். அதோடு அவ்வப்போது முறைவைத்து திறக்கப்படும் தண்ணீரும் கூட ஆங்காங்கே நீர்நிலைகளில் நடந்துவரும் கட்டுமான பணிகளால் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இதுவரை மடைக்கு தண்ணீர் வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்கின்றனர்.