Skip to main content

ஹைட்ரோ கார்பன் அவசர சட்டம்... கருப்பண்ணனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்!  பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

ஹைட்ரோகார்பன் திட்டம்  தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்து பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளதாவது,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதனை எதிர்கொள்ள முடியாத மத்திய அரசு, அனுமதி கொடுப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஹைட்ரோகார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் வாயிலாக கடிதம் மூலம் தெரிவித்தது.

 

Hydrocarbon Emergency Act ... karupannanan must be removed from cabinet! PR Pandian Emphasis


இதனையடுத்து போராட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஏற்கனவே இருந்த சட்ட வழிகாட்டு முறைகளில் மாற்றம் செய்து மக்கள் கருத்துக் கேட்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இதனை கைவிட வலியுறுத்தி தமிழக அரசு  அவசர சட்டம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து இதனை கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசிற்கு அவசரமாக கடிதம் எழுதினார்.

இந்நிலையில் கடந்த 2018 அக்டோபர் 9ம் தேதியே அன்றைய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தும் போது எதிர்ப்புகள் வலுப்பதால் அனுமதி வழங்க முடியவில்லை. எனவே மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல் நேரிடையாக மத்திய அரசே அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அமைச்சர் கருப்பண்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியதாகவும், அதனடிப்படையில்தான் தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தமிழக அரசுக்கும், மக்கள்நலனுக்கும் எதிராக அமைச்சர் கருப்பண்ணன் செயல்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்செயல்பாடு மூலம் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா? என அஞ்ச தோன்றுகிறது.

இது குறித்து தமிழக அமைச்சரவை அனுமதி பெற்று கடிதமளித்தாரா? இல்லையா? என்பதையும் முதலமைச்சர் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். கடிதமளித்தது உண்மையென்றால் கருப்பண்ணனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.