திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் எனும் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார். இதில், வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்நிலையில், மஞ்சுரேகா தாய் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் தங்கியுள்ளார். தாய் வீட்டில் இருந்தபடியே, வேலைக்குச் சென்று வந்துள்ளார். மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தினேஷ் பலமுறை அழைத்ததாகவும், மஞ்சுரேகா வரமறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் பணிபுரிந்து வரும் மாதனூரில் உள்ள கால் சென்டருக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவி மஞ்சுரேகாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கை, கால்கள் மற்றும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓடிப்போயுள்ளார். மஞ்சுரேகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மனைவியை வெட்டிய கணவர் தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மனைவி மீதுள்ள சந்தேகத்தில் தினேஷ் வெட்டியுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் கீழ், கணவர் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.