Skip to main content

சொத்துக்காக மனைவியை கொன்ற கணவன்; போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
A husband who lost his wife for property in erode

ஈரோடு மாவட்டம் கவுந்தப்படை அருகே பூமாண்டகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவருக்கு பூரணி (28) என்ற மகள் இருந்தார். இவர் எஞ்சினியர் படிப்பை முடித்து பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரி படித்த போது உசின்னியம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் மகன் மதன்குமார் (28) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மதன்குமாரும் பூரணியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், தம்பதியர் இருவரும் சேர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூரணிக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 10 தேதி அன்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது பூரணி திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி, கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பூரணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த பூரணியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூரணியின் உடல் உடல்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் மதன்குமாரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மதன்குமார் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவர். பூரணி பணம் படைத்த வீட்டு பெண் என்பதால், பூரணியை மதன்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு, பூரணி அவரது பெற்றோரிடம் சொத்தில் பங்கு எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து  பூரணியை பார்க்க அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது, மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி சொத்து கேட்டு தகராறு செய்து திருப்பி அனுப்பியுள்ளனர். பலமுறை சொத்தை பிரித்து வாங்குமாறு பூரணியிடம் மதன்குமாரும் அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், பூரணி அதை ஏற்கவில்லை. இதனால், சொத்து எதுவும் தனக்கு கிடைக்காது என முடிவு செய்த மதன்குமார், பூரணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, சம்பவம் நடந்த அன்று, மதன்குமார் பூரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், பூரணி தாய்ப்பால் கொடுக்கும்போது இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கு மதன்குமாரின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், பூரணிக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்துவிட்டு மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் மதன்குமாரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சொத்து கிடைக்காததால், காதலித்த மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.