Skip to main content

கல்லூரி மாணவியோடு ஓடிய கணவன்... 2 குழந்தைகளோடு தீ வைத்துக்கொண்டு இறந்த மனைவி... சோகத்தின் உச்சத்தில் கிராமம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

ddd

 

அழகான மனைவி, பள்ளிக் கூடம் செல்லும் 2 அற்புதமான ஆண் குழந்தைகள் இருக்கும்போது சபலத்தின் உச்சத்தால் கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானப்பட்ட மனைவி, தன் 2 குழந்தைகளையும் தன்னையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டு இறந்துபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). 10 வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்தவர். பிறகு திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். அவரது மனைவி ராதா, மகன்கள் அபிஷேக், அபரீத். இந்த அழகான குடும்பம் நன்றாகவே போனது.

 

அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார் முத்து. அதனடிப்படையில் அந்த வீட்டிலுள்ள ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இப்படித் தொடங்கிய நட்பு நாளடையில் குடும்ப நட்பாக மாறியது. ஆனால் அந்த நட்புதான் அந்த வீட்டில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் தகாத உறவாக மலரக் காரணமானது. இதைத் தொடக்கத்திலேயே முத்துவின் மனைவி ராதா கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. 

 

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு முத்து அந்தக் கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். இந்தத் தகவல் ஊரெல்லாம் பரவியதால் ராதாவுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இந்த அவமானங்களில் இருந்து மீள வழிதேடாத ராதா அவசரப்பட்டுவிட்டார்.

 

ஆம், நேற்று மாலை அறந்தாங்கி சென்று கேனில் பெட்ரோல்வாங்கி வந்துள்ளார் ராதா. மாலை, சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு தூங்குவதற்கு காத்திருந்த ராதா, வீட்டின் கதவுகளை உள்பக்கம் பூட்டிக் கொண்டு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து செல்லக்குழந்தைகள் உடலில் ஊற்றியுள்ளார். பின்னர், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். குழந்தைகளின் அலறல் சத்தம் அந்தப் பகுதியே எதிரொலிக்க, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து, வீட்டுக்குள் போய் பார்த்தபோது ராதாவும் ஒரு மகனும் கரிக்கட்டையாக எரிந்து இறந்து கிடந்தனர். ஒரு சிறுவன் மட்டும் 90 சதவீதம் தீக்காயங்களுடன் துடிதுடித்துக் கொண்டிருக்க அவசரமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை. சிகிச்சை பலனின்றி அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தான். 

 

Ad

 

இது குறித்து ராதாவின் உறவினர்கள் கூறும்போது, முத்துவைக் கைது செய்ய வேண்டும் என்றனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, இப்படி ஒரு மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து எப்படி முத்துவால் படிக்கிற புள்ளையோடு ஓட முடிந்தது. கல்லூரி மாணவி என்கிறார்கள். அந்த பெண்ணுக்கும் எங்கே போனது புத்தி. ஏற்கனவே மனைவி, குழந்தைகள் இருப்பது தெரிந்தும் இப்படி செய்யலாமா? இப்ப ஒரு குடும்பமே அழிந்து போனதே? முத்து மற்றும் அந்த மாணவியைக் கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.