Skip to main content

கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி.... விசாரணையில் கடும் அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

reprimanded husband passed away .... the policemen who were shocked at the investigation

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் குரும்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்ராயன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்த நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சென்ராயனின் தந்தை மொக்கை ராஜ், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலக்கோட்டை போலீசாருக்கு சென்ராயன் மனைவி வனிதாவின் நடவடிக்கையின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. வனிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அய்யனார் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. சென்ராயனுக்கு தெரியாமல் இருவரும் பல மாதங்கள் தனிமையில் வாழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விஷயம் சென்ராயனுக்கு தெரிய வரவே, அவர் வனிதாவை கண்டித்துள்ளார். தனது காதலுக்கு இடைஞ்சலாக கணவர் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வனிதா, சம்பவத்தன்று இரவு ஆண் நண்பர் அய்யனாரை வீட்டுக்கு வரவைத்துள்ளார்.

 

உறங்கிக்கொண்டிருந்த சென்ராயனை இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு, சென்ராயன் தற்கொலை செய்துகொண்டதுபோல் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். மறுநாள் காலை கணவர் தற்கொலை செய்துகொண்டதாக கதறி அழுது வனிதா நாடகமாடியுள்ளார். நிலக்கோட்டை போலீசார் விசாரணையில் வனிதா அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், வனிதாவை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய பழைய வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அய்யனாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.