Skip to main content

வாழைப்பழம் வாங்காமல் குடித்துவிட்டு வந்த கணவர்! மிரட்டலால் நடந்த விபரீதம்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Husband passed away police arrested his wife

 

திருச்சி, பன்னீர்செல்வம் சுப்பிரமணியபுரம் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரின் மகன் தினேஷ்ராஜசேகரன்(28). இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள டூவீலர் ஷோரூமில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லாவண்யா(26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர்.


இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ்ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி அடிக்கடி மனைவியை மிரட்டி வந்ததாக தெரிகிறது. 


இந்நிலையில், தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ்ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ்ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த தினேஷ்ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 


இதையடுத்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் கத்தியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவரும் கத்தியை பிடித்துக்கொண்டு  மல்லுகட்டியுள்ளனர். லாவண்யா கத்தியை பறித்த வேகத்தில், தனது கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ்ராஜசேகரன் மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி லாவண்யாவை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்