Skip to main content

குடிபோதையில் மனைவியுடன் தகராறு; கூலித்தொழிலாளி அடித்துக் கொலை!

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Husband passed away family dispute

 

தர்மபுரி அருகே, குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.     

 

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள மிட்டாரெட்டிஅள்ளியைச் சேர்ந்தவர் அனுமந்தன் (55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அனுமந்தனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். உறவினர்களும், அவர்களின் மகன்களும் பெற்றோரை சேர்த்து வைக்க முயற்சி எடுத்ததை அடுத்து, கடந்த மூன்று மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனாலும் அனுமந்தன் மது குடிக்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை. 

 

கடந்த பிப். 27ம் தேதி அன்று இரவு அவர் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து, இரவு அவர்கள் வழக்கம்போல் படுக்கைக்குச் சென்றனர். இந்நிலையில், மறுநாள் காலையில் பார்த்தபோது அனுமந்தன் படுக்கையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அனுமந்தனின் கால், கை பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் போது அவரை தாக்கியதில் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? எனச் சந்தேகித்தனர்.

 

இதையடுத்து சடலத்தை உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு அறிக்கையில், அனுமந்தன் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமந்தனின் மனைவி, மகன்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.