Husband passed away case Karur District court order life sentence to wife

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, திருக்கோகர்ணம் பகுதியினைச் சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுமதியின் தாய் வீடு கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் உள்ளது. இதன் காரணமாக அவர் அவ்வப்பொழுது மண்மங்கலம் சென்றுவந்துள்ளார். அதன்படி கடந்த 2018ம் ஆண்டு சென்றிருந்தபோது, அங்கு அவரது உறவினரான கமலக்கண்ணன் என்பவருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக நீடித்துள்ளது.

Advertisment

இதனை அறிந்த சுமதியின் கணவர் மணிகண்டன், அவர்களது பழக்கத்தைக் கண்டித்துள்ளார். இதனை சுமதி, கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கமலக்கண்ணன், மணிகண்டனை மது அருந்த கரூர் அடுத்த மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திய அவர்களுக்குள் சுமதி விவகாரமாக பேச்சு எழுந்து, தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

Advertisment

இந்நிலையில், அங்கிருந்த கட்டை மற்றும் கற்களை கொண்டு மணிகண்டனை தாக்கியுள்ளார். இதில், மணிகண்டன் மரணமடைந்தார். இந்தக் கொலை தொடர்பாக கமலக்கண்ணன், அவரது நண்பர் ரூபன் மற்றும் சுமதி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், சுமதி மற்றும் கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், ரூபனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.