துபாயில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு குழந்தைகளுடன் தாய் மனு அளித்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த எமல்டா ஆரோக்கிய மேரி என்பவர் தனது ஐந்து மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளுடன், இன்று (02.05.2020) விருத்தாசலம் வந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், ‘தனது கணவர் சார்லஸ் ரவிக்குமார் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்று இருந்ததாகவும், தற்போது கடந்த 30-ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டார் எனவும், ஆனால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பதால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான உதவியை செய்து தர வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு உறுதியளித்தார்.