கண்ணாமூச்சி ஆடுவது போல நடித்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விருதுநகர் நார்த்தாம்பட்டியைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கதிரவன் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரும் பல்லாவரத்தில் குடியேறி வசித்து வந்தனர். அப்பொழுது திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்ற தம்பதியினர் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கும்பல் ஒன்று அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடுவதற்காகக் கண்ணைக் கட்டியிருந்த கதிரவனைக் கொடூரமாகத் தாக்கி விட்டு அனிதாவிடமிருந்து செல்போன், நகை உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக அனிதா திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிரவன் சில நாட்களிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனிதாவின் திட்டம் தெரிய வந்தது. காதலன் அந்தோணி என்பவரைக் கைப்பிடிக்கத் திட்டமிட்ட அனிதா தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டு காதலுடன் சேர்ந்து இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு ஏதோ ஒரு கும்பல் தாக்கி கணவன் உயிரிழந்ததாக நாடகமாடியது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கதிரவனைக் கொலை செய்த அனிதா மற்றும் அந்தோணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தங்க மாரியப்பன் தீர்ப்பளித்தார்.