Husband brutally beaten his wife

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுரா பீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்களும்ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இவர் தனது மனைவி சபுரா பீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் சபுரா பீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார். பின்னர் அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இந்த நிலையில் சபுரா பீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டடத்திற்கு சென்று பாாத்தபோது, அங்கு சபுரா பீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டடத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலையில் பெயிண்டர் சதீஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், கடந்த 10 நாட்களாக தனது மனைவி உறவினர் (சகோதரி) வீட்டுக்கு சென்று விட்டதாகவும், சமரசம் செய்து அழைத்து வந்த இடத்தில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரைசிறையில் அடைத்தனர்.