Husband arrested under POCSO Act for marrying 15-year-old girl

தர்மபுரி அருகே கட்டாயத் திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, அவளுடைய கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஹெச்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு மகன் கலைஞன் (25). கூலித்தொழிலாளி. இவருக்கும், எருமியாம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2021ம் ஆண்டு, நவ. 10ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவள், கடந்த திங்கள்கிழமை (பிப். 20, 2023) தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பதினெட்டு வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே திருமணம் செய்ததோடு, ஒரு குழந்தைக்கும் தாயான விவரங்களை அறிந்த மருத்துவர்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

Advertisment

அதையடுத்து சிறுமியிடம் ஒரு புகாரைப் பெற்று பதிவு செய்துள்ளனர். அந்தப் புகாரில், ''கடந்த 2021ம் ஆண்டு, என் கணவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். கணவருடன் வசித்து வந்த நிலையில் நான் கர்ப்பம் அடைந்தேன். கடந்த நான்கு மாதமாக என் கணவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. இந்நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கட்டாய திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் சிறுமியின் கணவர் கலைஞன் மீது போக்சோ சட்டத்தின் கீழும், அவருடைய உறவினர்கள் சின்னதம்பி, காந்தா ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.