Husband arrested for assaulting his wife under the influence of liquor

திருச்சி துறையூர் பி. மேட்டூர் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன்ராஜ்(25). இவரும் திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சுகன்யா (28) என்பவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இந்த தம்பதியருக்கு இதுவரை குழந்தைஇல்லை. இதில் மனைவி திருச்சி நந்தி கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையிலும் அவரது கணவர் ஜீவன்ராஜ் அருகாமையில் உள்ள இன்னொரு ஜவுளிக் கடையிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான ஜீவன்ராஜ் அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பணி முடிந்து வீடு திரும்பிய சுகன்யாவை நந்தி கோவில் தெரு பகுதியில் வைத்து ஜீவன்ராஜ் வழிமறித்து அவரது செல்போனை பறித்துவிட்டு கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சுகன்யா கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.