
விழுப்புரம் மாவட்டம், தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், செங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணமான மூன்று மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியராஜா, மனைவியைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல என்ன காரணம் என்று தெரியாமல் அகிலா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு அவரது ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அகிலாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார். அப்போது கண்டாச்சிபுரம் அருகிலுள்ள ஆர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மைக்கேல் ஜெயக்குமார் என்பவர், ஷகிலாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை என்று இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்த நேரத்தில் தனது புகைப்படத்தை பெரியநாயகியிடம் கொடுத்துள்ளார் அகிலா.
இதன்பிறகு அகிலாவும், மைக்கேல் ஜெயக்குமாரும் கொஞ்சம் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அதன்பிறகு அகிலாவிற்கும், செங்காடு ஆரோக்கியராஜிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் ஏற்கனவே மைக்கேல் ஜெயக்குமாருடன் இருந்த புகைப்படத்தை செல்வி தரப்பு யூடியூப் சமூக வலைத்தளத்தில் பரவச் செய்துள்ளனர். அதை பார்த்த தனது கணவர் ஆரோக்கிய ராஜா, தன் மீது கோபம் கொண்டு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. தனது கணவர் தன்னைவிட்டு பிரிய காரணமாக இருந்த மைக்கேல் ஜெயக்குமார், செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலா, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.