Skip to main content

"வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணும்"... நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

தர்ஷிகா என்ற பெண்ணை அவளது கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, இலங்கைவாழ் தமிழ் பெண் தர்ஷிகா. இவருக்கு 27வயதாகிறது. இலங்கையில் இருந்த போது தனபாலசிங்கம் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். திருமணம் முடிந்தவுடன் வேலை காரணமாக கனடாவிற்கு சென்றுவிட்டார். இதனால் தர்ஷிகா இலங்கையிலேயே தனது பெற்றோருடன் இருந்துள்ளார். பின்னர் கணவருடன் சேர்ந்து இருப்பதற்காக தர்ஷிகாவும் கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். 

 

incident



பின்பு கணவனுடன் கனடா நாட்டில் வாழ்ந்து வந்த தர்ஷிகா வீட்டில் தனியாக அதிக நேரம் இருப்பதால் வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். மேலும் தன்னுடைய குடும்பம் வசதி இல்லாத காரணத்தினால் வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உதவ முடியும் என்று நினைத்து பார்த்து வேலைக்கு செல்ல கணவனிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு உறவினர்களும் கணவன், மனைவி சண்டையை தீர்த்து வைத்துள்ளனர். அப்படி இருந்தும் மீண்டும் தர்ஷிகாவும், தனபாலசிங்கமும் சண்டை போட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிறகு அடிக்கடி தர்ஷிகாவை சந்தித்து தனபாலசிங்கம் தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. 

இதனால் தர்ஷிகா நீதிமன்றத்துக்கு சென்று வழக்குப்போட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்ஷிகாவை, அவரது கணவர் சந்திக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பின்பு நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தர்ஷிகாவை சந்தித்துள்ளார் தனபாலசிங்கம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ஏற்பட தர்ஷிகாவை கத்தியை எடுத்து துரத்தி சென்று குத்தியுள்ளார். மனைவியை துரத்தி குத்திய சம்பவம் அங்கு இருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் தனபாலசிங்கம் சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கானது கனடா போலீஸாரால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இது பற்றி செய்தியாளர்களிடம் தர்ஷிகாவின் பெற்றோர் கூறும் போது, "எங்கள் மகளை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது. எங்கள் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்கள் அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்க வேண்டும்" என்று கதறி அழுதனர். மேலும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் பெண்ணை நன்றாக பார்ப்பார் என்று அவர்கள் காதலுக்கு சம்மதித்தோம், தற்போது என் பெண் இல்லையே என்று கதறி அழுத சம்பவம் அனைவரையும் வேதனை அடைய வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம்பெண் தற்கொலை; மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The woman's parents in law were burned to incident by relatives for Teenage incident in u.p

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அன்ஷிகாவிடம், வரதட்சணை கேட்டு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்து போன அன்ஷிகா, நேற்று (18-03-24) இரவு தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர், அன்ஷிகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அன்ஷிகாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களுடன் அன்ஷு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அன்ஷிகா குறித்து அன்ஷு குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் மோதலாக உருவாகியது. இதில் ஆத்திரமடைந்த அன்ஷிகாவின் உறவினர்கள், அன்ஷுவின் வீட்டிற்குத் தீ வைத்தனர். இதில் வீட்டுக்குள் இருந்த அன்ஷுவின் குடும்பத்தினர் மாட்டிக்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருப்பினும், அன்ஷுவின் தந்தை ராஜேந்திர கேசர்வானி (64) மற்றும் தாய் ஷோபா தேவி (62) ஆகியோர் பற்றி எரிந்த தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவர் உடலையும் போலீசார் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.