Skip to main content

திருமணமான ஒரே ஆண்டில் மனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட கணவர்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Husband and wife passes away near salem

 

சங்ககிரி அருகே, திருமணமான ஒரே ஆண்டில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை விசாரணைக்குப் பயந்து, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவருடைய மனைவி பிரியா (27).  இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனி வீட்டில் வசித்துவந்தனர். கணவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் தினமும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. 

 

மதுப்பழக்கத்தைக் கைவிடுமாறு மனைவி கூறியும், கார்த்திக் மேலும் குடிப்பழக்கத்தை தீவிரமாக தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை (அக். 20) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் கார்த்திக். அப்போதும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது. சண்டை ஓய்ந்த நிலையில் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். 

 

வியாழக்கிழமை (அக். 21) காலையில் எழுந்த கார்த்திக், அருகில் உள்ள கடையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கச் சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

தன்னால்தான் மனைவி இப்படியொரு முடிவை எடுத்தார் என்ற குற்ற உணர்ச்சியால் கதறி அழுதபடியே, மாரியம்மன் கோயில் அருகே ஓடிச்சென்றார். அங்கு தன் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும், அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

மனைவியின் தற்கொலைக்குத் தன்னுடைய குடிப்பழக்கம்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் கார்த்திக்கும் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது காவல்துறை விசாரணைக்குப் பயந்தும்கூட தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம், சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தேவி உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். பிரியா, கார்த்திக் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

பிரியா உண்மையில் தற்கொலைதான் செய்துகொண்டாரா அல்லது குடும்பத் தகராறில் அவரை கணவரே கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டது போல செட்டப் செய்தாரா? கார்த்திக் தற்கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

திருமண பந்தத்தில் நுழைந்த ஒரே ஆண்டில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வைகுந்தம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.