
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம்சேரி அருகே உள்ள காந்திநகர் நரி குறவர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் நாகார்ஜுன்(28). இவருக்கும் நந்தினி22) என்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரேம்(2) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளுக்குச் சென்று அங்கு ஜவுரி முடிகள் வாங்கிக் கொண்டு தண்ணீர் பந்தல் இடத்தில் தங்கிவந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(17.11.2024) மல்லகுண்டா சுற்று வட்டார பகுதிகளில் ஜவுரி முடிகளை வாங்கிக்கொண்டு தாங்கள் தங்கியுள்ள தண்ணீர்பந்தல் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சோர்காயல் நத்தம் பகுதியில் இருந்து மல்லகுண்டா நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் நாகார்ஜுன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி நந்தினி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கணவன் மனைவி இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான டிப்பர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் ரஜினி என்பவரை தேடி வருகின்றனர்.