மனைவி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (வயது 60) விவசாய கூலி வேலை செய்து வருபவர். அவரது மனைவி சின்னம்மாள் (வயது 55). இவர்களின் இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதியடைந்து வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சின்னம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலியபெருமாள், மனைவி இறந்த துக்கத்தில் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். அவரது உறவினர்கள் சின்னம்மாளின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அப்போது திடீரென கலியபெருமாள் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மயக்கத்திலிருந்து தெளிய வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் கண் விழிக்கவே இல்லை. கலியபெருமாளும் உயிரிழந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்திய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தி உள்ளது.