Skip to main content

கிரைண்டர் குழவிக் கல்லைப் போட்டு மனைவி கொலை; கணவன் கைது

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

 

husband and wife incident police investigation salem district

 

சேலம் அருகே, கிரைண்டர் குழவிக் கல்லை தலையில் போட்டு மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 68). தேநீர் போடுபவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 65). இவர்களுடைய மகன் நாகராஜ், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

 

இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. அக். 7- ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

அப்போது ஆத்திரம் அடைந்த செல்வம், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து மனைவியின் தலை மீது போட்டுள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து செல்வம் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டார். 

 

இதுகுறித்து மறுநாள் காலையில் தகவல் அறிந்த வீராணம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் சென்று பார்த்தனர். அங்கே ஜெயந்தி கொலையுண்டு கிடப்பது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதற்கிடையே தலைமறைவாக இருந்த செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர். 

 

காவல்துறையில் செல்வம் அளித்துள்ள வாக்குமூலம், "நான் அயோத்தியாபட்டணத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் வேலை செய்து வந்தேன். சம்பவத்தன்று நான் வேலைக்குச் செல்லாமல் திடீரென்று விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தேன். இதையறிந்த என் மனைவி திட்டினார். இதனால் எங்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. 

 

பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினேன். அப்போதும் ஜெயந்தி என்னை, வேலைக்குச் செல்லும்படி திட்டினார். இதனால் மன உளைச்சல் அடைந்த நான், குழவிக் கல்லை தலையில் போட்டு அவரை கொன்று விட்டேன்." இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

 

இதையடுத்து, செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.