Skip to main content

திருமணத்தை மீறிய உறவிற்கு இடைஞ்சல்...கணவனை கொன்ற மனைவி...ஆண் நண்பருடன் கைது

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

 

HUSBAND AND WIFE INCIDENT POLICE INVESTIGATION IN KRISHNAGIRI DISTRICT


 
தளி அருகே, தான் விரும்பிய ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதை  கண்டித்ததால், தன் கணவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியையும், ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள பெரிய ஆவேரிப்பள்ளியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தின் பின் பகுதியில், உடலில் மிளகாய்ப்பொடி தூவப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தளி காவல்நிலைய காவல்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் அளித்தனர்.  

 

இதையடுத்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சிவலிங்கம், தளி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குமரன், எஸ்.ஐ. கதிரேசன் மற்றும் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

முதல்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பா (வயது 50) என்பதும், கட்டடத் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அவருடைய உடலில் வெளிப்புறக் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால், முகம், மார்பு ஆகிய பகுதிகளில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது.  

 

தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சடலமாகக் கிடந்த  சின்னப்பாவின் மனைவி பாஸ்தாமேரி (வயது 35). இவருக்கும், உள்ளூரைச் சேர்ந்த துரைசாமி (வயது 55) என்பவருக்கும் திருமணத்தை மீறிய  உறவு இருந்து வந்துள்ளது.  

 

சின்னப்பா கட்டட வேலைக்குச் சென்ற பிறகு, பாஸ்தாமேரியும் அவருடைய ஆண் நண்பரும் அடிக்கடி சந்தித்து தனிமையில்   இருந்துள்ளனர். இதையறிந்த சின்னப்பா, இருவரையும் கண்டித்திருக்கிறார்

 

ஆனால் அவர்கள் சின்னப்பாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அடிக்கடி தனிமையில் சந்திப்பதை தொடர்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சின்னப்பா, தன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அவருடன் வாழப் பிடிக்காத பாஸ்தா மேரி, கணவர் உயிருடன் இருந்தால் தனது சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக இருப்பார் என்று கருதி, சின்னப்பாவை கொலை செய்து விடலாம் என்று ஆண் நண்பரிடம் கூறியுள்ளார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். 

 

அதன்படி, சம்பவத்தன்று அவர்கள் இருவரும் சின்னப்பாவின் முகத்திலும், உடலிலும் மிளகாய்ப்பொடி தூவி நிலைகுலையச் செய்துள்ளனர். பின்னர், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், கொலை நடந்த இடம் குறித்தும், சடலத்தை ஊராட்சி சேவை மையக் கட்டடம் அருகே கொண்டு வந்து போட்டதற்கான காரணம் குறித்தும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்