Skip to main content

கணவருடன் தகராறு: மனைவியின் அவசர முடிவால் சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

husband and wife incident police investigation

 

சேலம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயே மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் காட்டு வலவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி மரகதம் (வயது 30). இவர்களுக்கு செல்வகணபதி (வயது 7), கோகுலகண்ணன் (வயது 5) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். 

 

கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணம் ஆனது முதலே அவர்களுக்குள் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (பிப். 14) காலையில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

கோபம் அடைந்த கணவன், வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். மனம் விரக்தி அடைந்த நிலையில் இருந்த மரகதம், இனியும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை எனக் கருதி, குழந்தைகளுடன் இறந்துவிட முடிவெடுத்துள்ளார். 

 

இதையடுத்து, தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். மகன்கள் இருவரையும் முதலில் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். அதன்பிறகு அவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 

வெளியே சென்ற கணவன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கே மனைவியும், குழந்தைகளும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின்பேரில் கிணற்றடிக்குச் சென்று பார்த்தபோது கிணற்றில் குழந்தைகள் அணிந்திருந்த துணிமணிகள் மிதந்தது தெரிய வந்தது. 

 

குழந்தைகளுடன் மனைவியும் கிணற்றில் குதித்து இறந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த பிரபாகரன், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் கிணற்றில் தேடிப்பார்த்தும் சடலங்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

 

தீயணைப்பு வீரர்கள் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் மரகதம் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத் தகராறில் மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே.மோரூர் காட்டு வலவு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.